மதுரை:விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “ அம்மச்சியாபுரத்தில் 126 வீடுகள் உள்ளன. அனைவரும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர். இதனால் அம்மச்சியாபுரத்தில் இமானுவேல் சேகரன் வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி ஆகஸ்ட் 29-ல் மனு அனுப்பினோம்.
செப். 10-ல் இம்மானுவேல் சேகரனின் சிலை நிறுவப்பட்டது. ஆனால், முறையாக அனுமதி பெறும் வரை சிலையை மூடிவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இமானுவேல் சேகரன் சிலையை திறக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பவானி சுப்பராயன், “சிலை அமைக்க அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால், மனு கொடுத்த 12-வது நாளில் அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளனர். அம்மச்சியாபுரம் கிராமத்துக்கு செல்லும் பாதையில் பிற சமூகத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் முன்பு சாதி மோதல்களும் நடைபெற்றுள்ளன.