தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்தாம் வகுப்பு படித்த சச்சின் தெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: 90 பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அலுவலக உதவியாளர் பதவி வழங்கியதையடுத்து, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் தெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி தமிழ்நாடு அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

By

Published : Oct 13, 2020, 8:57 PM IST

Court
Court

மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர். இவர்களுக்கு மத்திய- மாநில அரசு சார்பில், அவர்களை ஊக்குவித்து ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்குப் பரிசுகளும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது இல்லை.

இந்த வீரர்களையும் மத்திய- மாநில அரசுகள் சமமாகப் பார்ப்பதில்லை. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. எனவே தமிழ்நாட்டில், சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கங்களையும், பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார். இருப்பினும் அவரை தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இன்று (அக்13) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் தெண்டுல்கருக்கு அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? எனச் சரமாரியாகத் தமிழ்நாடு அரசுக்குக் கேள்வி நீதிபதிகள் எழுப்பினர்.

தமிழ்நாட்டைக் காட்டிலும் மற்ற மாநிலங்களான தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் தமிழ்நாட்டில் 90க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பத்தாவது மட்டுமே படித்துள்ள காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்துள்ளனர். விளையாட்டு எது என்பது முக்கியமல்ல, அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவர் விளையாட்டில் சாதித்து இருக்கிறார் என்பதே முக்கியம்.

இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார் மற்றும் கிரிக்கெட் ஸ்டார் ஆகிய மூன்று ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசால் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து மத்திய- மாநில அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மலைவாசஸ்தலங்களில் தொடரும் இ-பாஸ்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details