மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர். இவர்களுக்கு மத்திய- மாநில அரசு சார்பில், அவர்களை ஊக்குவித்து ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்குப் பரிசுகளும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது இல்லை.
இந்த வீரர்களையும் மத்திய- மாநில அரசுகள் சமமாகப் பார்ப்பதில்லை. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. எனவே தமிழ்நாட்டில், சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கங்களையும், பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார். இருப்பினும் அவரை தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு இன்று (அக்13) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் தெண்டுல்கருக்கு அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? எனச் சரமாரியாகத் தமிழ்நாடு அரசுக்குக் கேள்வி நீதிபதிகள் எழுப்பினர்.