மதுரை மாவட்டம் கோ.புதூர் பகுதியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று (அக்.21) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், "தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த 10 ஆண்டுகளாகக் கவனிப்பாரற்று கிடந்தன.
அவற்றைத் தரம் உயர்த்துவதற்காக தற்போது ஆய்வு செய்து வருகிறோம். இங்குப் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
தமிழ்நாடு முழுவதும் தற்போது மொத்தம் 25 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒவ்வொரு நிலையத்திலும் தலா ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 60 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டடங்களிலேயே மாணவர்கள் பயின்று வருகின்றனர்.