விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. டிஜிட்டல் மற்றும் மின்னணு பரிவர்த்தனை உள்ளிட்ட பண பரிவர்த்தனை மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்கலாம் என்று மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. அதில், வருமான வரி சட்டம் பிரிவு 269 STமற்றும் 271 DA கொண்டுவரப்பட்டது. இந்த புதிய சட்டபிரிவில், ஒரு நபர் 2 லட்சம் ரூபாய்க்கும் மேலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டால், அந்த பணபரிவர்த்தனை டிஜிட்டல் முறையிலோ அல்லது காசோலை உள்ளிட்ட பரிவர்த்தனை மூலமாகவோ மற்றும் மின்னணு பரிவர்த்தனை முறைகளான NEFT, RTGS முறையில் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பத்திர பதிவுத்துறை என்பது தமிழ்நாடு அரசுக்கு வருவாய் அளிக்கக்கூடிய துறைகளில் மூன்றாவது துறையாக உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் நில உரிமை மாற்றம், குத்தகை, அடமானம் உள்ளிட்ட அனைத்து வகை உரிமை மாற்றம் தற்காலிக உரிமை மாற்றம் போன்றவை பதிவுத்துறை மூலம்தான் நாள்தோறும் நடைபெறுகிறது.
இதற்காக நடைபெறும் பதிவின்போது 2 லட்சம் ரூபாய்க்கும் மேலான பண பரிவர்த்தனை வருமான வரித்துறை சட்டத்தில் கூறியபடி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவோ அல்லது காசோலை மூலமாக நடைபெறுவதில்லை. சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கும் மேல் வைப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கும், வங்கி கணக்கும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணபரிவர்த்தனை நடைபெற்றாலும் அந்த தகவல் வங்கியில் உள்ள தானியங்கி தகவல் மூலமாக வருமான வரித்துறைக்கு தெரிந்துவிடும்.
இதன் மூலம் பண பரிவர்த்தனைக்காண மூலங்களை கண்டுபிடித்து விடலாம். ஆனால் தமிழ்நாட்டில் பதிவுத் துறையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 2 லட்சம் ரூபாய்க்கும் மேலான இரு தரப்பு பணபரிவர்த்தனை, மின்னணு மூலமாகவோ ஆன்லைன் மூலமாக நடைபெறுவதில்லை. இது சட்டவிரோதம் எனவே தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நில உரிமை மாற்றம், ஒப்பந்தம், உரிமை மாற்றம், அடமானம், தானம் போன்ற நில உரிமை மாற்றம் அதன் பயனாக நடைபெறும் பண பரிவர்த்தனையை வருமான வரிச் சட்டம் பிரிவு 269 ST சட்டப் பிரிவின் படி நடைபெற வேண்டும்.
இதற்காக உரிய வழிமுறைகளை வகுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிவு துறை சார்பில், இந்த நடைமுறை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நடைமுறையில் உள்ளது என தெரிவித்தனர். மேலும், இந்த நடைமுறை முறையாக பதிவு துறை சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவின்போது நடைபெறுகிறதா என வருமான வரித் துறையினர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.