மதுரை தத்தநேரி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் காற்றாலைகளில் மோதியும், உயர்மின் கம்பிகளில் மின்சாரம் தாக்கியும் பறவைகள் பல உயிர் இழக்கின்றன.
காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறுவதில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்திலும், நாடளவில் தமிழ்நாடு முதலிடத்திலும் இருந்துவருகின்றன. மிக அதிகமான காற்றாலைகள் கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ளன. காற்றாலைகள், உயர் மின்னழுத்த கம்பிகளின் மூலமாக 0.5% பறவைகள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
இதில் பல அழிந்துவரும் பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்துபோவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் குளிர்காலங்களில் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துசெல்கின்றன. இவற்றில் காற்றாலை இறகுகளில் மோதியும், மின்னழுத்த கம்பிகளில் அமரும்போது மின்சாரம் பாய்ந்தும் பல பறவைகள் இறந்துவருகின்றன.
2004ஆம் ஆண்டு மத்திய அரசு கொடுத்துள்ள அறிவிப்பின்படி காற்றாலைகளுக்கு ஆரஞ்சு நிற பெயிண்ட் அடித்திருக்க வேண்டும் எனவும், காற்றாலைகள் சுற்றும்போது ஏற்படுகின்ற சத்தம் பறவைகளைத் துன்புறுத்தும் வண்ணம் இருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளனர்.