மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள பாலமேட்டில் இன்று (ஜன.15) மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 4 மணி வரை 8 சுற்றுக்களாக வீரர்களும், காளைகளும் களமிறங்குகின்றனர். இதுவரை 651 வீரர்களும் 800 காளைகளும் பங்கேற்கத் தயார் நிலையில் உள்ளனர்.
ஒவ்வொரு சுற்றும் ஒரு மணி நேரம் என வரையறுக்கப்பட்டு தலா 75 வீரர்கள் களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கு பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கையைப் பொறுத்து, வீரர்கள், மாட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும்.
காயம் படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பர். அவர்களை உடனடியாக அழைத்துச் செல்ல 10 அவசர ஊரதிகள் தயார் நிலையில் உள்ளன. காயம் படும் காளைகளை அழைத்துச் செல்ல இரண்டு கால் நடை அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன.
வீரர்களுக்குப் போக்குவரத்து காவல் துறையினர் முன்னிலையில் மது போதை பரிசோதனை செய்யப்பட்டு, ரத்த அழுத்தம் சீராக உள்ளதா எனவும் பரிசோதிக்கப்படும். உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என சோதனை செய்த பின்னரே வீரர்களுக்கு வரிசை எண்கள் கொண்ட டி-சர்ட் அணிவிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னரே, காளைகள் அவிழ்த்து விடப்பட்டு போட்டிகள் தொடங்கும்.