மதுரை மாவட்டம் மேலூர் பகுதியிலுள்ள 1.5 ஆயிரம் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில், பெரியார் பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர்களுடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சு.வெங்கடேசன், "இன்று இந்தி குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு இந்திய ஒற்றுமைக்கு இதைவிட ஒரு ஆபத்தான கூற்று இருக்க முடியாது.
இந்திய ஒற்றுமை என்பது இந்திய மொழிகளின் சமத்துவத்தில்தான் மையப்புள்ளியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளின் சமத்துவத்தைப் பேணுவதுதான் இந்திய ஒற்றுமையைப் பேணுவதாகும்.
நாடாளுமன்றத்தில் 30 முதல் 40 விழுக்காடு உறுப்பினர்கள் மட்டுமே இந்தி மொழியில் பதவியேற்றனர். ஏறக்குறைய 60 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி அல்லாத மொழிகளில்தான் பதவியேற்றனர்.
இந்திய மொழிகளின் சமத்துவத்தையும் இந்திய ஒற்றுமையையும் சீர்குலைக்கிற கருத்தாகவே இதை பார்க்க முடியும். ஆகவே, உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து கண்டத்திற்குரியது. அவர் தன் கருத்தை வாபஸ் பெறவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.