மதுரை: 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மதுரையின் பல்வேறு பகுதிகளில் இன்று (பிப்.8) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதனிடையே, மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து சமுதாய சங்க நிர்வாகிகளோடு அவர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து சமுதாய நிர்வாகிகளின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்ற அவர், கூட்டத்தில் பேசுகையில், "தமிழ்நாட்டில் யாருக்கும் கிடைக்காத அமைச்சராக மதுரை மக்களுக்கு விஞ்ஞானி அமைச்சர் கிடைத்துள்ளார். வைகையை தேம்ஸ் ஆக மாற்றுவோம் என்று கூறிவருகின்ற நிலையில் இன்றைக்கு சாயக்கழிவுகள் அனைத்தும் வைகையில் கலந்து வருகின்றன.
அரசு திட்டத்தில் செலவிடும் பணம் எங்கு செல்கிறது என்று தெரியாமலே ஆட்சியை நடத்துகின்றனர். மதுரையில் திமுக ஆட்சியில் பாலங்கள் மட்டுமன்றி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது, கோடிக்கணக்கில் செலவு செய்து செய்தித்தாள்களில் முதல்பக்கத்தில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்று அதிமுகவினர் விளம்பரம் செய்து வருகின்றனர். வெற்று விளம்பரம் செய்யும் அதிமுக ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழு தற்போது எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருக்கிறது.