கிருஷ்ணகிரி: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது. அதிமுகவில் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் எனப் பொதுக்குழுவில் முடிவுசெய்யப்பட்டு, சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை உருவாக்கி செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி கட்சியும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான். மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக இதுபோன்ற கருத்துகளைக் கூறுகின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.