தமிழ்நாடு

tamil nadu

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலிக்கப்படும் - டிடிவிக்கு முனுசாமி தூது!

By

Published : Feb 1, 2021, 11:46 AM IST

டிடிவி தினகரன் தனது தவறை ஒப்புக்கொண்டு மீண்டும் அதிமுகவில் இணைய மன்னிப்புக் கடிதம் வழங்கினால், தலைமை கடிதத்தைப் பரிசீலிக்கும் என கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

கே பி முனுசாமி பேட்டி
கே பி முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது. அதிமுகவில் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் எனப் பொதுக்குழுவில் முடிவுசெய்யப்பட்டு, சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை உருவாக்கி செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி கட்சியும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான். மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக இதுபோன்ற கருத்துகளைக் கூறுகின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.

சசிகலாவை ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த கே.பி. முனுசாமி, அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்தது. அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும் என்றார்.

அதிமுக, அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு, "டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட ஒருவர் அரசியல் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட கட்சி அமமுக. அப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை.

வேண்டுமென்றால் டிடிவி அதிமுகவுக்கு எதிராகச் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து, தன்னை அதிமுகவில் இணைக்கக்கோரினால், அதற்கு அதிமுக தலைமை கடிதம் தொடர்பாகப் பரிசீலனை செய்யும்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details