கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை மருத்துவ முகாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், மத்திய கள விளம்பர அலுவலகம் சார்பில்
- தூய்மை பாரதம் திட்டம் இருவார விழா,
- பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைக்கு கற்பிப்போம்,
- ஒரே பாரதம்; உன்னத பாரதம்
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஆகியோருக்கு காசநோய் தடுப்பு பெண் உரிமைகள், சட்ட ஆலோசனைகள், சுற்றுப்புற சூழல் மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அவசியங்கள் குறித்து துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கருத்தரங்கு மூலம் தனித்தனியே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்து அதில் கலந்துகொண்ட மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான திருமதி அறிவொளி பேசுகையில்,
"நாட்டில் உள்ள பல்வேறு வகையான நோய்கள் சுற்றுப்புற தூய்மையின்மை காரணமாக உருவாகிறது. தூய்மையை கடைப்பிடித்தால் 70 விழுக்காடு நோய்கள் நம்மைவிட்டு விலகும். அதனால் தூய்மை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகத்தான் மத்திய அரசு தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்திவருகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பும், கல்வியும் அவசியம் எனக் கூறிய நீதிபதி இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் தனியாகச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் அத்தருணத்தில் பல்வேறு பாலியல் குற்றச் சம்பவங்களைச் சந்திக்க நேரிடுவதாகத் தெரிவித்தார்.