கிருஷ்ணகிரி: ஓசூரை அடுத்த கக்கனூர் கிராமத்தில், நேற்று (பிப்.28) எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 500 மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இரு மாநில எல்லை பகுதியில் நடைப்பெற்ற எருதுவிடும் விழாவை கண்டுகளிக்க கக்கனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்திருந்தனர். இந்த நிலையில், போட்டியில் எருது விடுவது தொடர்பாக அங்கிருந்த இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தகராறு மோதலாக மாறி சண்டையாக மாறியதாக அறியமுடிகிறது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இருதரப்பும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து, காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த தடியடியில் சிலர் லேசான காயம் அடைந்தனர்.