வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் சார்பாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வி.செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் இன்று தனது முதல் தேர்தல் பரப்புரையை கோடாங்கிப்பட்டி கிராமத்திலிருந்து தொடங்கினார்.
தொடர்ந்து பெருமாள்பட்டி, சின்னம்மாநாயக்கன்பட்டி, ஒத்தையூர், பாறையூர், பால்வார்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
அவருடன் கரூர் எம்பி ஜோதிமணியும் வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள், பொதுமக்களுக்கு துண்டறிக்கையை வழங்கினர். பரப்பரையின் போது, செந்தில்பாலாஜிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக கரூர் எம்பி ஜோதிமணி வாக்கு சேகரிப்பு கரூர் தொகுதியில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது முதல் நாள் தேர்தல் பரப்புரையை கோடாங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் வழிபாடு செய்து தொடங்குவதேயே வழக்கமாக கொண்டுள்ளனர்.திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியும் இன்று காலை 7 மணியளவில் முத்தாலம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்.
கரூர் எம்பி ஜோதிமணி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது திமுகவினரையும் மற்ற கூட்டணி கட்சியினரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.