தமிழ்நாடு

tamil nadu

உயிருக்குப்போராடிய காகத்தை மீட்ட இளைஞர்கள் - குமரியில் நெகிழ்ச்சி சம்பவம்!

பரபரப்பான வாழ்க்கை சூழலில் யாருக்கும் உதவ முன்வராமல் பயணிக்கும் மனிதர்கள் மத்தியில் மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி, உயிருக்குப் போராடிய காகம் ஒன்றை இளைஞர்கள் பொறுமையாக மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடந்துள்ளது.

By

Published : Jun 2, 2022, 10:41 PM IST

Published : Jun 2, 2022, 10:41 PM IST

மரத்தில் தொங்கிய காகத்தை மீட்ட இளைஞர்கள்
மரத்தில் தொங்கிய காகத்தை மீட்ட இளைஞர்கள்

கன்னியாகுமரி: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த அரசு பள்ளியின் முன்பக்கம் நிற்கும் வேப்பமரத்தில் நேற்று (ஜூன் 1) காகம் ஒன்று இரை தேடியபடி அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. இரை தேடி வந்த அந்த காகம் வேப்பமரத்தில் அமர்ந்தபோது, அந்த மரத்தில் பின்னி பிணைந்து கிடந்த நூலில் அதன் கால்கள் சிக்கின.

காலில் நூல் சிக்கியதைக்கண்டு கொள்ளாத, அந்த காகம் வேறு பகுதிக்கு இரை தேட பறந்து செல்ல முயன்றபோது, காலில் சிக்கியிருந்த நூலால் நிலை தடுமாறி தலைகீழாக தொங்கியது. இதனால், பறக்க முடியாமல் உயிருக்குப் போராடியது. காகத்தின் இந்த பரிதாப நிலையை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான நிலையில், இதைப் பார்த்த அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பதிவிட்ட நபரிடம் விவரத்தைக் கேட்டறிந்து அந்த பள்ளிக்குச் சென்றனர். அதுவரை அந்த காகம் தலைகீழாக தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

உடனடியாக அந்த இளைஞர்கள் பள்ளியில் இருந்த கம்பு ஒன்றை வாங்கி, விறு விறுவென வேப்பமரத்தில் ஏறி அந்த காகத்தை மீட்டனர். காலில் பிணைந்திருந்த நூலையும் கத்தியால் பிரித்தெடுத்து, அந்த காகத்தை சுதந்திரமாக பறக்க விட்டனர். ஆனால், உயிர் பயத்தில் இருந்து மீண்ட அந்த காகம் காலில் ஏற்பட்ட காயத்தால் பறக்க முடியாமல் அவதியுற்றது.

இதைக்கண்டு அங்கு திரண்ட காகக்கூட்டங்களும் கத்தி கரைந்தன. இதனையடுத்து காயத்தோடு இருந்த காகத்தை இளைஞர்கள் வனத்துறை ஊழியரை வரவழைத்து ஒப்படைத்தனர். உயிருக்குப் போராடிய காகத்தை மீட்டு மறுவாழ்வு அளித்த இளைஞர்களின் செயலை அந்த வழியாக சென்றவர்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்திச் சென்றனர்.

மரத்தில் தொங்கிய காகத்தை மீட்ட இளைஞர்கள்

இதையும் படிங்க:கீழே கிடந்த நகை, பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான தந்தை - மகன்!

ABOUT THE AUTHOR

...view details