மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் காலமானதையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது. அதன் ஆரம்ப கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகருக்கு கொண்டுவரப்பட்டது.
திங்கள்நகரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கட்டடத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நான்காயிரத்து 500 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை அகற்றிவிட்டு புதிய வாக்குப்பதிவுக்கு தயார்படுத்துதல், வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு இருக்கிறதா என ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பணிகள் நேற்று தொடங்கியது.