கன்னியாகுமரி அருகிலுள்ள முகிலன்குடியிருப்பில் ஊர் பொதுமக்கள் நடத்தி வரும் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் நள்ளிரவில் புகுந்த திருடர்கள், கோயில் கருவறையின் கதவை உடைத்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். மேலும் தங்க நகைகள் இருந்த லாக்கர் பெட்டியை உடைக்க முடியாததால் அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவர் பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு ஒரு மணிக்கு நான்கு நபர்கள் கோயிலுக்குள் செல்வது பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக ஒரு இளைஞர் இருசக்கரவாகனத்தில் வேகமாக வந்துள்ளார். அந்த இளைஞரை விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர்கள் தெற்கு சூரங்குடி அருகிலுள்ள அத்திக்கடை, சுடலைமாடன் கோயில் தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (21)என்பதும் முகிலன் குடியிருப்பு கோயிலில் நகைகள் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.