கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படுவது வழக்கம்.
கரோனா பரவல் காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு எஸ்பி அலுவலகத்தில் மக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறுவதில்லை.
எஸ்பி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகார் மனு பெட்டியில் மனுவை செலுத்திவிட்டு வரவேண்டும்.
பின்னர், காவல்துறையினர் அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், புகார் பெட்டியில் போடப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு சென்று சேர அதிக நாள்கள் ஆவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் சாமானிய மக்களுக்கு மட்டுமே இந்தப் புகார் பெட்டி பயன்படுத்தப்படுவதாகவும், அரசியல்வாதிகள் நேரடியாக எஸ்பி அலுவலகத்தில் சென்று மனு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், சாதாரண மக்களுக்கு ஒரு நியாயம், அரசியல்வாதிகள் என்றால் ஒரு நியாயமா என்று எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் மக்கள் கேள்வியெழுப்பினர்.
இதையும் படிங்க:இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் அதிமுக - ஜோதிமணி கடும் தாக்கு