கன்னியாகுமரி:குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள கல்லவீரியன்விளை பகுதியை சேர்ந்தவர் ராதிகா (50). இவர் கணவரை பிரிந்து தனது சகோதரியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடுமையான மன வருத்தத்தில் இருந்த ராதிகா கடந்த 16ஆம் தேதி களக்காடு அருகே உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு கோயிலில் முருகன் என்பவர் ராதிகாவிடம், உன் குடும்பத்தில் நிம்மதி இல்லை மன கஷ்டத்தில் இருக்கிறாய், வீட்டில் தோஷம் உள்ளதால் பரிகார பூஜை செய்து அதை நீக்காவிட்டால் உன் உயிருகே ஆபத்து என்று அவர் கூறியுள்ளார்.
பரிகார பூஜை செய்வதற்கு முருகனை ஊருக்கு அழைத்து வந்துள்ளார் ராதிகா. இவர்களுடன் காட்டுப்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரும் வந்துள்ளார்.
வீட்டுக்குள் முருகன் மட்டும் சென்று பார்த்துவிட்டு தோஷம் அதிகமாக உள்ளதாகவும், எனவே உங்களிடம் உள்ள நகைகளை தாருங்கள் என்று கூறி 14 பவுன் நகையை வாங்கி வீட்டின் முன் புதைத்துள்ளார்.
பின்னர், அதை நாளை எடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்கள். மறுநாள் சகோதரிகள் இருவரும் நகை புதைத்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது அங்கு நகை இல்லை. அதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. பின்னர் இது குறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வந்தனர்.
இது தொடர்பாக ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி ராதிகாவுக்கும் முருகனுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது. எனவே தங்கைக்கு தெரியாமல் வீட்டிலுள்ள நகையை எடுக்க முடிவு செய்த இவர்கள், இருவரும் பரிகார பூஜை போல் நாடகமாடியுள்ளார்.
பின்னர் நகையை வெளியே புதைப்பது போல் நடித்து முருகன் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் ராதிகாவும் மாயமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ராதிகா மற்றும் முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:திருமணம் மீறிய உறவால் இருவர் தற்கொலை!