காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தபெற்ற ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயிலில் அனந்த சரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆதி அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமக்கள் தரிசனத்திற்காக வெளியே கொண்டுவரப்படுவார்.
இந்நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறவுள்ள இந்த நிகழ்வைக் காண தமிழ்நாடு முழுவதிலிருந்தும், பிற மாநிலங்களிருந்தும்கூட பக்தர்கள் வருவார்கள். இதற்கான பல்வேறு பணிகளை ஒரு மாத காலமாக இந்த சமய அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்களில் பல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஸ்ரீ ஆதி அத்தி வரதர் தரிசனம் இதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீ ஆதி அத்தி வரதர் நிகழ்வுக்காக மாவட்டம் சார்பில் மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள், நான்கு சிற்றுந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
நுாற்றுக்கும் மேற்பட்ட கழிவறைகள் அமைக்கப்படும். நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிதண்ணீர் மட்டுமில்லாமல் இரண்டு லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாகவும், நகர் முழுவதும் நுாற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளை அமைத்து பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்.
மேலும், இந்த நிகழ்வின்போது பாதுகாப்புப் பணியில் 2, 100 காவலர்கள் பணிபுரிய உள்ளதாகவும், ரூ.2.89 கோடியில் புனரமைப்பு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், கோயில் வளாகத்தில் மட்டும் புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இலவச தரிசனமும், ரூ.50-க்கு சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.