தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி ஒரு மாதத்திற்கு சுப நிகழ்ச்சிகளுக்கு நோ: பட்டு நகருக்கு படையெடுத்த மக்கள்!

ஜூலை 16ஆம் தேதி, ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால், சுப நிகழ்ச்சிகளுக்காக பட்டு எடுக்க பொதுமக்கள் இன்று ஒரே நேரத்தில் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

By

Published : Jul 11, 2021, 6:43 PM IST

பட்டு நகருக்கு படையெடுத்த மக்கள்
பட்டு நகருக்கு படையெடுத்த மக்கள்

காஞ்சிபுரம்: பட்டு சேலைகளுக்கு உலகப் புகழ் பெற்றது காஞ்சிபுரம். பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சியில், ஆனி மாதம் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு இன்று(ஜூலை 11) திருமண பட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

வரும் சனிக்கிழமை (ஜூலை 17) தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி மாதம் பிறக்கிறது. அந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறுவது இல்லை.

இந்த நிலையில், ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்தம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அன்று திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வைத்துள்ளவர்கள், பட்டு சேலை எடுப்பதற்காக இன்று, காஞ்சிபுரத்தில் குவிந்தனர். வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்தும் காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.

அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் பட்டு சேலை விற்பனை கடைகளிலும், கரோனா தொற்று ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி விற்பனை நடைபெற்றதால் குறைந்த அளவு வாடிக்கையாளர்களே கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்தனர்.

பட்டு சேலைகள் வாங்கிச் செல்ல வந்தவர்களில் ஏராளமானோர் வாகனங்கள் மூலம் வந்து குவிந்துள்ளதால் காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக, காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வியாபாரம் பெருமளவில் முடங்கியிருந்த நிலையில், தற்போது விற்பனை படுஜோராக நடைபெறுவதால் பட்டு சேலை கடை உரிமையாளர்களும், நெசவாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:விதிமுறைகளை மீறி பேருந்து பயணம்: பயணிகளுக்கு கரோனா பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details