காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவித்துண்டு அணிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனைக்கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில் முன்பு, உள்ள அம்பேத்கர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவித்துண்டு அணிவித்துவிட்டுச்சென்றுள்ளனர்.
அதனையடுத்து அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட செய்தி அறிந்து ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன்பு குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் கோட்ட டி.எஸ்.பி ஜூலியர் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு காவி உடை போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்த நிலையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மின்சார வாரிய அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர். அதேபோல் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் ஏராளமான போலீசாரும் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு போடப்பட்டதால் விசிகவினர் சாலை மறியல் இதையும் படிங்க:பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மத்திய இணை அமைச்சர் மரியாதை