காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் 27ஆவது வார்டில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 21 வயதே ஆன கல்லூரி மாணவியான பவித்ரா என்பவர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு நகராட்சி, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் பேரூராட்சிகளில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்துக் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள்பட்ட முருகன் குடியிருப்பு 27ஆவது வார்டில், திருக்காலிமேடு என்.எஸ்.கே. பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகளான 21 வயதான பவித்ரா தற்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் களம் இறங்கியுள்ளார்.
வேட்பாளரான 2கே கிட்ஸ் மாணவி
மக்கள் நீதி மய்யத்தின் 2K கிட்ஸ் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் சார்பில் 27ஆவது வார்டில் போட்டியிட இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை பவித்ரா தாக்கல்செய்தார்.
பவித்ரா தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்றுவருகிறார். இளம் வயது வேட்பாளர் என்பதால் முருகன் குடியிருப்பு 27ஆவது வார்டில் இவர் தற்பொழுது பேசும்பொருளாய் வலம்வருகிறார்.
தான் வெற்றிபெற்றால் அப்பகுதியில் குடியிருப்பு வசதி, மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளை முதலில் பூர்த்திசெய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இவர் 2கே கிட்ஸ் என்பதால் இளம் தலைமுறையினர் மத்தியிலும் பெறும் வரவேற்பையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Horoscope 2022: பிப்ரவரி 4 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி?