காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வந்துசெல்கின்றனர்.
சுகாதாரச் சீர்கேடு
தற்போது கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாகவும் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் குவியல் குவியலாக உடற்கூராய்வு செய்யும் அறை அருகே கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும், கரோனா நோயாளிகள் பயன்படுத்திய முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மருத்துவக் கழிவுப் பொருள்கள், கழிவு உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டுவருவதால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசிவருகிறது.
நோயாளிகளின் கோரிக்கை
மேலும், மருத்துவமனையின் பின்புறம் முக்கியச் சாலை உள்ளதால் சாலைகளில் செல்பவர்களும் தூர்நாற்றத்தின் காரணமாக அவதிப்பட்டுவருகின்றனர்.
இக்கழிவுகளை எரிப்பதால் அதிகளவில் புகைமூட்டம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.
ஏற்கனவே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் இறப்பு அதிகரித்துவரும் நிலையில், மேலும் இதுபோன்ற செயலால் நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சற்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அதனால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நாள்தோறும் சேரும் குப்பைகளை உரிய முறையில் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நோயாளிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.