காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை குன்னம் பகுதியில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், செயற்கைக்கோள் தரைதள கட்டுப்பாட்டு மையத்தினை இன்று(ஜனவரி 28) இஸ்ரோ தலைவர் கே.சிவன் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, ஜேப்பியார்கல்லூரி நிர்வாக இயக்குநர் மரிய வில்சன், முதலமைச்சர் மெர்லின் லிவிங்ஸ்டன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டப் பலர் உடனிருந்தனர்.
பின்னர் இது குறித்து ஜேப்பியார் கல்லூரியின் பேராசிரியர் பெனிஸ்ஸா கூறியதாவது, "இஸ்ரோ வரும் பிப்ரவரி 28ஆம் தேதி யூனிட்டி சாட் ஜே.ஐ.டி சாட் எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளை ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், என்டிஆர்எஃப் எனப்படும் தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றம் அமைப்பு மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு 75 செயற்கைக்கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதற்கான முன்னோட்டமாக கடந்த 2018ஆம் ஆண்டில் எங்கள் கல்லூரியிலேயே மாணவர்கள், ஆசிரியர்களின் முயற்சியால் ஒரு செயற்கைக்கோள் ஆய்வகத்தை அமைத்தோம். அன்றிலிருந்து சொந்தமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்ற புதுமுயற்சியுடன் செயல்பட்டனர்.