சத்தியமங்கலத்தில் 27 நகராட்சி வார்டுகள் உள்ளன. இங்குள்ள 35 ஆயிரம் வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் 2017ஆம் ஆண்டு ரூபாய் 55 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
22வது வார்டு முனியப்பன் கோயில் சாலையில் நீரேற்று நிலையம், கோட்டயத்தில் சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு மையமும் செயல்பட உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் பவானி ஆற்றில் நேரடியாக கலப்பதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சத்தியமங்கலம் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர்.
வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த மக்கள் இதனால் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கொண்ட உயர் மட்டக் குழு அமைத்து சுத்திகரிப்பு மையம் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளியங்கோம்பை பகுதிக்குச் சென்று, உயர் மட்டக்குழு அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போதுமான இடம் உள்ளதா என ஆய்வு செய்தது.
விவசாயிகளும் அப்பகுதி மக்களும் நிலத்தடி நீரை மட்டுமே குடிநீராகப் பயன்படுத்துவதால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பட்சத்தில் குடிநீர் மாசுபடும் என்றும்; எனவே அதை அமைக்கக்கூடாது எனவும் 200க்கும் மேற்பட்டோர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மக்களின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதையும் படியுங்க: ஈரோடு - புளியம்கோம்பை பகுதியில் அணை கட்ட மக்கள் கோரிக்கை!