ஈரோடு:தென்னிந்தியாவில் மிகவும் செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டின் 4ஆவது புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது.
ஆயிரத்து 455 சதுர கி.மீ., பரப்பரளவு கொண்ட புலிகள் காப்பகத்தின் தலமலை வனப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தின் மத்தியில் திம்பம், ஆசனூர்-காரப்பள்ளம் வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
தமிழ்நாடு - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவுள்ள மலைப்பாதையில் யானைகள் புலிகள், சிறுத்தை, காட்டெருமை, அரிய வகை புள்ளிமான்கள், கழுதைப்புலி உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி தென்படுகின்றன.
நீர் உணவு தேடி வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன. அண்மையில் தாளவாடி, திம்பம், ஆசனூரில் சிறுத்தை சாலையைக் கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தன.
சத்தியமங்லகம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் வனத்தின் சூழல் தன்மையைத் தொடரவும் தமிழ்நாடு - கர்நாடகாவை இணைக்கும் திம்பம் மலைச்சாலையில் இரவுப் போக்குவரத்தைத் தடை செய்யும் வகையில், 2019ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.