கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை கூலித்தொழிலாளர்கள் 100 நாள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் குளம், குட்டைகள் தூர்வாருதல், சாலைப்பணிகள், நீர்நிலைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இத்தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கின் மூலம் ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய மூன்று வட்டாரங்களில் உள்ள 40 கிராம ஊராட்சிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.