ஈரோடு:தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 227 கன அடி ஆக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 5ஆம் தேதி 83 அடியாக இருந்த நிலையில் இன்று 95.35அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 25.48 டிஎம்சியாக உள்ளது.