ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆசிரியர் நகரைச்சேர்ந்தவர், லோகநாதன். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும் ஹரிகுக விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
ஹரிகுக விக்னேஷ் வாய்க்கால் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். லோகநாதன் கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு விபத்தில் லோகநாதன் படுகாயமடைந்ததால் தனியார் நிறுவனத்திற்கும் வேலைக்குச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மகனின் கல்விச்செலவு, குடும்பம் நடத்த முடியாத நிலையில் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்த நிலையில் இருந்த லோகநாதன் நேற்று மாலை மகன் ஹரிகுக விக்னேஷை டியூசனுக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுவிட்டுவிட்டு, வீடு திரும்பும் வழியில் கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார்.