திண்டுக்கல்:ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான ஃபருக் அப்துல்லா இன்று கொடைக்கானல் வந்தார். கொடைக்கானலில் இவரது தந்தை ஷேக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது, '43 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கொடைக்கானலுக்கு வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. பழைய நினைவுகளை எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவருடன் நானும் அன்னை தெரசாவும் கொடைக்கானலுக்கு வந்தது பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பாஜக அரசு, சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, காஷ்மீரின் ராஜூரி மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்து உள்ளது. இன்னமும் பயங்கரவாதம் அங்கு முடிவுக்கு வரவில்லை.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல் காந்தியின் யாத்திரை சிறப்பாக உள்ளது. இது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ராகுல் காந்தி சிறப்பாக அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார். இந்தியா என்பது பன்முகம், பல மொழி, பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா. இங்கு ஒரே நாடு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை.