திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அக்ரகாரப்பட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுன் குமார்(27). நிலக்கோட்டை பகுதியில் வேன் டிரைவராக உள்ளார். இவரும், இதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் நேற்று முன்தினம் (நவ.26) இருசக்கர வாகனத்தில் நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி சாலையில் துரைச்சாமிபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த பாண்டி செல்வம், சுப்பிரமணியன், அஜித், காமாட்சிபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட ஐந்து பேரும் கும்பலாக வந்து அர்ஜுன் குமாரையும், ரமேஷைம் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து இருவரையும் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அர்ஜுன் குமாருக்கும், ரமேஷுக்கும் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் பலமாக இருந்தால் மேல் சிகிச்சைக்காக அர்ஜுன் குமார் மதுரை தனியார் மருத்துவமனையிலும், ரமேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அர்ஜுன் குமாரின் உறவினர் இளையராஜா கொடுத்த புகாரின்படி நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன், பாண்டி செல்வம், தமிழரசன் , சுப்பிரமணி, அஜித் மற்றும் ஒருவர் என, ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
டூவீலரில் சென்றவர்களுக்கு கத்திக்குத்து - நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கி கத்தியால் குத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்ரகாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த,சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு நிலக்கோட்டை நாலு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு கிராமத்திற்கு இடையே ஏதேனும் பிரச்சனை வர விடக்கூடாது என்பதற்காக, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க :இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இளைஞர் உயிரிழப்பு..!