திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி மாயி. இவர் நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 4) மாலை தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக நகர பொறுப்பாளர்கள், மாயி தரப்பைச் சேர்ந்த அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அருகில் இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் இரவு நேரத்தில் அதிமுக நிர்வாகி மாயி உணவகத்துக்கு சென்ற திமுகவினர் உணவகத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் உணவகத்தை சேதப்படுத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுகவினர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.