திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. கரோனா ஊரடங்கிற்குப் பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவித்து சுற்றுலாப்பயணிகள் மெல்ல வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ பாஸ், இ ரிஜிஸ்ட்ரேசன் முறை கட்டாயம் என்ற நடைமுறை இருந்து வருவதால் சுற்றுலாப் பயணிகளை நம்பியே இருக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள்தான் அதிகளவில் கொடைக்கானல் வந்து செல்கின்றனர். அவர்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என் கொடைக்கானல் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானல் நகரம் சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளது. இந்த தொழிலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். எனவே கொடைக்கானல் வந்து செல்ல இ பாஸ் முறையை முற்றிலும் ரத்துசெய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், முக்கிய சுற்றுலாத் தலங்கள் அனைத்தையும் திறக்க வேண்டும், கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொடைக்கானல் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.