பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் சுற்றுலாத் துறையின் சார்பில் வட்டக்கானல் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சுரேந்திரன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து வெளிநாட்டினரும் பொதுமக்களுடன் இணைந்து மண்பானையில் பொங்கல்வைத்து வழிபட்டனர்.
சுற்றுலாத் துறையினர் கொண்டாடிய பொங்கல் விழா அதைத்தொடர்ந்து தப்பாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளின் திறனைக் கண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவர்களுடன் இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: காணும் பொங்கல் விழாவைக் கொண்டாடிய 101 இளம் பெண்கள்