தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் நடராஜ் (70) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் அவருடைய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (35) என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களூர் மருத்துவமனை, ஓசூர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் கழிவுகள், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை லாரியின் மூலம் கொண்டு வந்து தரம் பிரித்து கொட்டி எரித்து வந்துள்ளார்.
இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு தலை சுற்றல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், வியாழக்கிழமையன்று வழக்கம் போல் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.