தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 10, 2019, 11:06 PM IST

ETV Bharat / state

ஏலம் போன ஊராட்சி மன்ற தலைவர் பதவி - அதிமுக பிரமுகர் மறுப்பு!

கடலூர்: ஊராட்சி மன்ற தலைவர் பதவியை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்ததாக கூறப்பட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என அதிமுக பிரமுகர் சக்திவேல் மறுத்துள்ளார்.

local election
local election

தமிழ்நாட்டில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இன்னும் மூன்று வாரத்தில் நடக்கவுள்ள இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை தொடங்கியது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு ஏலம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ. 50 லட்சத்திற்கும், துணைத் தலைவர் பதவி ரூ. 15 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டுள்ளது.

இதில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ. 50 லட்சம் என அதிமுக பிரமுகர் சக்திவேலும், அதேபோல், துணைத் தலைவர் பதவிக்கு ரூ. 15 லட்சம் என தேமுதிகவைச் சேர்ந்த முருகனும் ஏலம் ஏடுத்துள்ளனர். இந்த ஏலத் தொகையை வரும் 15ஆம் தேதிக்குள் இருவரும் செலுத்தவுள்ளதாகவும், இந்த ஏலத்தின்படி சக்திவேல், முருகனைத் தவிர அந்த பதவிகளுக்கு வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள் எனவும் செய்திகள் வெளியானது.

மேலும், அவர்கள் ஏலம் எடுக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் பண்ருட்டி தாசில்தார் உதயகுமார் தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி பண்ருட்டி தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடுகுப்பம் ஊராட்சியில் இன்று விசாரணை நடத்தினர்.

அதிமுக பிரமுகர் சக்திவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில்

இந்த வீடியோ குறித்து அதிமுக பிரமுகர் சக்திவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நான் பணம் கொடுத்து ஏலம் எடுத்ததாக பொய்யான தகவல் வீடியோ பரவுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன். அதற்காக கோயிலில் கூடியிருந்த ஊர் மக்களிடம் ஆதரவு கேட்க சென்றேன். இதற்கு முன்னால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது இந்த ஊருக்கு நல்லது செய்த காரணத்தினால் என்னை ஒருமனதாக தேர்வு செய்வதாக கூறினார்கள். மக்களிடம் ஆதரவு கேட்க சென்றேனே தவிர பணம் கொடுத்து ஏலம் எடுப்பதற்காக செல்லவில்லை. எனக்கு வேண்டாதவர்கள் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இது குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளேன்' எனறார்.

ABOUT THE AUTHOR

...view details