கடலூர்கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் பெண் தனது இரண்டு மகன்களுடன் பண்ருட்டி கண்டரக்கோட்டை சேர்ந்த வசந்தி என்ற பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இரண்டு மகன்கள் கையில் வைத்திருந்த அட்டையில் போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை, எனக்கு நீதியும் இல்லை என எழுதி இருந்தனர். மேலும் அந்தப் பெண் துண்டைத் தரையில் வைத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தெரிவித்தது, " எனது கணவர் பாரதிராஜா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கணவர் தெரிவித்து இருந்தார். தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாகத் தெரிய வருகிறது. இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.
ஆனால் போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாததால் புகார் குறித்து விசாரணை நடத்தவில்லை. எனவே போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து அப்பெண்ணுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: விவாகரத்து தர மறுத்த மனைவியின் குடும்பத்திற்கு தீ வைத்த கணவன் - இருவர் பலி