கடந்த 2018இல் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.25 கோடி மதிப்பில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது 25ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த மணிமண்டபம் திறக்கபடவுள்ளது.
இதற்கான விழா ஏற்பாடுகள் கடலூர் மஞ்சநகர மைதானத்தில் பல்வேறு விதிமுறை மீறல்களுடன் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கக் கூடிய இந்த விழாவிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரமாண்ட இரும்பு பந்தல் அமைக்கப்பட்டு மின்சார அலங்காரம், மின்விசிறிகள் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், விழா மேடைக்கு முதலமைச்சர் வந்து செல்லவதற்காக நல்ல நிலையில் இருக்கும் சாலையை மீண்டும் புதிய சாலையாக போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த மைதானமே தண்ணீரால் குளம்போல் சூழ்ந்து விழாவை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எப்படியும் இந்த விழாவை நடத்தியே தீரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி இரவு, பகலாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது.