கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூகப் பரவலைக் குறைக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், மத்திய, மாநில அரசுகள் உத்தரவு வழங்கியுள்ளன. இதனால், பெரியவர்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்களுடைய பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன்களுடன் நேரத்தைக் கழிப்பது என களத்தில் இறங்கிவிட்டனர்.
வளரும் குழந்தைகள் தங்களுடைய பொன்னான நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியிலுள்ள லிட்டரசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், அங்குப் பயிலும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர். முதல் கட்டமாக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் வழியாக வகுப்பு நடைபெற்றுவருகிறது.
எப்படி? என்னென்ன சொல்லித்தருகிறார்கள்?
ஆசிரியர்கள் அவரவர் வீட்டில் இருந்துகொண்டே இணையதளம் மூலம் மாணவர்களை ஒருங்கிணைக்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை எடுத்துவருகின்றனர். இதனால், விடுமுறையில் மாணவர்களின் கவனம் சிதறாமல் மாணவர்கள் படிக்க முடியும் என அப்பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், " திடீரென அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, மாணவர்கள் பள்ளி வர இயலாமல், வீட்டில் உள்ளனர். தங்களுடையப் பொழுதுபோக்கிற்காக, தொலைக்காட்சி, இணையதளங்கள், செல்போன் விளையாட்டு ஆகியவற்றில் நேரத்தை வீணடித்துவருகின்றனர். இதற்கு மாற்றாக, ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என எண்ணினோம்.