கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம், அசோக் நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா சமூக மக்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டை தங்களுக்கு பெற்றுத் தரவேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதனைதொடர்ந்து விஸ்வகர்மா சமூக மக்கள் மத்தியில் பேசிய அவர், "நான் இங்கு ஓட்டு சேகரிக்க வந்தவன் மட்டுமல்ல. நீங்கள் கேட்டிருக்கும் இடஒதுக்கீட்டை ஒட்டுமொத்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி முன்பு இருந்தவர்கள் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை.
மேலும் குருட்டாம் போக்கில் 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகின்றது. இந்த இட ஒதுக்கீடு வங்கியில் பணம் இல்லாமல் செக் கொடுப்பதைப் போன்றது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசாங்க வேலை என்பது எல்லாருக்கும் போய் சேராது. வேலை தேடி அலையும் தொழிலாளர்களாக இல்லாமல், சிலர் ஒன்றாக சேர்ந்து மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளாக வேண்டும்.
இதற்காக திறன் மேம்பாட்டு மையம் ஒவ்வொரு தொகுதியிலும் வைக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பதை எங்களை பார்த்து மற்ற கட்சிகள் காப்பி அடிக்கின்றனர். சாதி, மதம் இல்லாமல் மக்கள் நலனை மட்டுமே வைத்து செயல்படும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே" எனத் தெரிவித்தார்.