கோவை அவினாசி சாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபை அரங்கில் சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அமுமுக வேட்பாளர் சேலஞ்சர் துரை, சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக், மநீம வேட்பாளர் மகேந்திரன், வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், "மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் வசதி தீர்த்து வைக்கப்படும். பாதுகாப்பு நலன் கருதி தொகுதி முழுவதும் சிசிடிவி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில்துறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டெக் பார்க் அமைக்கப்படும்.
இதன் மூலம் தங்க நகை தொழிலை மேம்படுத்தலாம். இரண்டாவது அரசு மருத்துவமனை அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.