கோவிட்-19 பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக மூடப்பட்டிருந்த சிறு-குறு தொழில் நிறுவனங்கள் இயங்க தற்போது நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருபக்கம் 34 வகையான சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், மறுபக்கம் அதிலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஊரக பகுதிகளில் பேருந்து போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் தளர்வு அறிவித்தும் அந்தந்த தொழில் நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் பலரும் அவதியுற்று வருகின்றனர். பெரும் தனியார் துறை நிறுவனங்கள் அவர்களது நிறுவன வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து வர அனுமதி அளித்தது. ஆனால் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் நிலை இன்றும் கேள்வி குறியாகவே உள்ளது.
இது குறித்து பேசிய பிளம்பர் முருகவேல் பேசுகையில், “ ஊரடங்கிலிருந்து அரசு தளர்வு அளித்தும் பேருந்து இல்லாததால் வேலைக்கு செல்ல இயலாமல் தவித்து வருகிறோம். வேலை செய்யும் நிறுவனங்களில் இருந்து எங்களை வரச்சொல்லி அழைத்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், வேலைக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் உள்ளதால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம். வருமானமும் இல்லை, அரசு கொடுத்த உதவி தொகையும் போதவில்லை என்ற நிலையில் அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறோம். அரசு பேருந்து வசதிகள் செய்து கொடுத்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல ஏதாவது வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுக்கின்றார்.
சிறு-குறு நிறுவனங்கள் 50% ஊழியர்களை மட்டுமே கொண்டு செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் எண்ணிக்கை குறைவாகவே பணிக்கு செல்ல இருக்கும் தொழிலாளர்கள் தகுந்த இடைவெளியோடு பயணம் மேற்கொள்ள முடியும் என்கின்றனர் சிறு - குறு தொழிலாளர்கள்.