கோயம்புத்தூர்:ஆலாந்துறை யூனியன் பள்ளி வீதியைச் சேர்ந்தவர் சூர்யகுமார். இவரது மகன் சந்ரு (11). இவர் ஆலாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியர் அலுவலம் அருகே உள்ள சுவரில் இருந்த தேனீ கூட்டை அகற்ற, அங்கு படிக்கும் 7ஆம் வகுப்பு மாணவர்களான சந்ரு, சூர்யா, சக்திவேல் ஆகிய மூன்று மாணவர்களை தலைமை ஆசிரியர் பழனிச்சாமி அழைத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், மாணவர் சந்ரு கிருமிநாசினியைக் கொண்டு நெருப்பு பந்தத்தை பற்ற வைத்து, தேன் கூட்டை அகற்ற முயன்றபோது, எதிர்பாராத விதமாக கிருமி நாசினி கேன் மற்றும் மாணவர் சந்ருவின் சீருடையில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர். ஆனால் மாணவர் சந்ருவின் உடலில் 15 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.