கோயம்புத்தூர்: கோவையில் திமுக தலைவர்களை கேலியாக சித்திரித்து நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. அந்த நோட்டீஸ்களை கிழித்து திமுகாவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், இதனை கண்டிக்கும் வகையில், தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக்.27) காலை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்த போதும், தடையை மீறி மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது ஒரு வழக்கும், உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் மீது ஒரு வழக்கும் என இரண்டு வழக்குகள் தனி தனியாக பதிவு செய்தனர்.
மேலும் உதயநிதி ஸ்டாலின், கார்த்திக் MLA, சி.ஆர்.ராமச்சந்திரன், பையா கவுண்டர், சேனாதிபதி , தென்றல் செல்வராஜ், பைந்தமிழ் பாரி, கோட்டை அப்பாஸ் , பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் ஆகிய 9 பேர் மீது தடை உத்தரவை மீறுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காதது, நீட் தேர்வு குறித்து கிராம புற மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 சட்டப்பிரிவுகளிலும் ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு அரசியலிலேயே இடம்பெறாத கட்சிகள் வன்முறையில் ஈடுபடுகிறது: பாஜக முருகன்!