கோவை: நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகியிருப்பினும், அவரும் அவரது கட்சியினரும் போட்டியிடும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. இந்தத் தேர்தலுக்காக இரவு பகல் பாராமல் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் கமலுக்கு துணையாக அவரது உறவினர்களும், நடிகர்களும், நண்பர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
கமலுக்காக களம் இறங்கிய சுஹாசினி
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளரும், தனது சித்தப்பாவுமான கமல் ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுஹாசினி வாக்கு சேகரித்தார்.
அந்தவகையில், கமல் ஹாசனின் அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் தற்போது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இவர் மக்கள் நீதி மய்யத்தின் நட்சத்திரப் பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஹாசினி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசனுக்கு அதாவது அவரது சித்தப்பாவிற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அங்கு ஒவ்வொரு தெருவாக மக்களை சந்தித்து, ஆதரவு கோரி வருகிறார். வாக்கு சேகரிக்க வந்த சுஹாசினிக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.