சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் கருணாநிதி (36). இவர் தனது அம்மா, தங்கை, தங்கையின் 10 வயது மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப் 30ஆம் தேதி கருணாநிதி சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது தங்கை, கணவனை இழந்து அவளின் 10 வயது மகனுடன் தனது வீட்டில் வசித்து வருவதாகவும், அதிகாலை முதல் காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவரின் வீட்டருகே நடந்து சென்ற அப்பெண்ணை யாரோ காரில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. காரில் பெண்ணை அழைத்துச் சென்ற நபர் அதே பகுதியில் டீக்கடையில் வேலை பார்க்கும் சக்திவேல் (41) என்பதும் அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி பல நாள் பின்னால் திரிந்ததும் தெரியவந்தது.