தமிழ்நாடு முழுவதும் எத்தனை கோயில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன? என்ற விவரத்தை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பத்திரிகையின் திருச்சி மற்றும் வேலூர் பதிப்பக வெளியீட்டாளர் கோபால்ஜி தாக்கல் செய்துள்ள மனுவில், "கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கோயில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள்,
ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோர் வருமானம் இழந்து, பெரும் சிரமத்தில் உள்ளனர்.
கோயில்கள் மூடப்பட்டாலும், அன்றாட பூஜைகளை நடத்துவதற்காக, இவர்கள் அனைவரும் தினமும் கோயிலுக்கு வந்து வழக்கம்போல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியம் கிடையாது. கோயிலுக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 35 விழுக்காட்டை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஊதியமாகவும், 35 விழுக்காட்டை கோயில் பராமரிப்புக்காகவும் செலவிடப்படுகிறது. மீதமுள்ள 30 விழுக்காடு கோயில்களின் உபரி நிதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையிடம் தற்போது 30 விழுக்காடு உபரி நிதியாக சுமார் ரூ.300 கோடி உள்ளது. எனவே, அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார்.