தமிழ்நாடு முதலமைச்சராக, இக்கட்டான சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவர்முன் பல்வேறு சவால்கள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், மருத்துவம், கல்வி , பொதுச் சுகாதாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலுள்ள பல்வேறு சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
மருத்துவத் துறை சவால்கள்
கரோனா தொற்றின் முதல் அலை குறைந்த நிலையில், சரியாகக் கட்டுப்படுத்த தவறியதால் தற்போது இரண்டாவது அலையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. தினம்தோறும் 20 ஆயிரம் பேருக்குத் தொற்று என்ற இலக்கை தமிழ்நாடு எட்டியுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த மனிதவளம் நிறையத் தேவைப்படுகிறது.
மருத்துவர்கள் செவிலியர்கள், லேப் டெக்னீசியன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கரோனாவால் உயிர் நீத்த முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை குறைக்காமல் மீண்டும் அதே போல் வழங்க வேண்டும். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் உடனே நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
கரோனாவைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சமாக, 14 நாட்கள் முழு ஊரடங்கினை அமல்படுத்த முன்வர வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மருத்துவ வல்லுநர்களை கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியக் கட்டாயத்தில் அரசு உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல் நீட் தேர்வு ரத்து என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை; இது மிகப்பெரிய சவலாக அரசுக்கு இருக்கும் என வல்லுநர்கள் என்கின்றனர்.
கல்வித்துறை முன் சவால்கள்
கரோனா பெருந்தொற்றால் கல்வி பயில்வது தடைப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குழந்தைகளின் கல்வி, மனநிலை, சத்துணவு சென்று சேர்க்கிறதா என ஆய்வு வேண்டும். ஆன்லைன் வழி கற்பதால் அனைத்து தரப்பினருக்கும் கல்வி சமமாகக் கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டிய வகையில் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். கற்றலை எளிமையாக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் இணைய வழி கற்பதால் போதிய வகையில் தேர்ச்சி பெற முடிவதில்லை. பொறியியல் மாணவர்கள் 30 விழுக்காடு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். உயர் கல்வியில் ஒற்றை சாளர முறை சேர்க்கையை மீண்டும் கொண்டு வர வேண்டும், இதனால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள், ஆராய்ச்சி துறை மாணவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.