தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2022, 4:31 PM IST

ETV Bharat / state

சென்னையில் ரூ.115.49 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளச்சேரி மேம்பாலம்... ஸ்டாலின் திறைந்து வைப்பு...

சென்னையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 115.49 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தை இன்று (செப்.17) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

g
g

சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.17) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில், 78.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு – சென்னை வழித்தடப் பாலப்பகுதியையும் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.145.49 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையினை இணைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இரண்டு அடுக்கு மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிதட ஒரு வழி மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து 1028 மீட்டர் நீளத்தில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் அடுக்கு மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது, வேளச்சேரியில், 78.49 கோடி ரூபாய் செலவில் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி – தாம்பரம் சாலையை இணைத்து 640 மீட்டர் நீளத்தில் முதல் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"ராசா போன்றவர்களை பேசவிட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரோ?" - டிடிவி தினகரன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details