திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு அக்கட்சியின் மக்களவைத் தலைவர் டி. ஆர். பாலு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
டி.ஆர். பாலு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு :
”கரோனா தொற்று முதன்முதலாக பரவத் தொடங்கியபோது, அமெரிக்காவில் தங்கியுள்ளவர்களை சென்னைக்கு அழைத்து வரத் திட்டமிடப்பட்டு, சென்னைக்கு ஒரு விமானம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த விமானம், மும்பை வழியாக சென்னைக்கு வரும் என்றும், அது சிகாகோவில் இருந்து புறப்படுபவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதேசமயம், மற்ற பெரு நகரங்களான நியூயார்க்கில் இருந்தோ, நியூ ஜெர்ஸியிலில் இருந்தோ விமானங்கள் இயக்கத் திட்டமிடப்படவில்லை. ஆனால் அங்கும் பெருமளவில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மாணவர்கள், மென்பொருள் வல்லுநர்கள், இந்தியாவிலிருந்து சென்றுள்ள சிறுவர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இப்பெரு நகரங்களில் ஏராளமாக உள்ளதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். அவர்கள் அனைவரும் தங்களின் இருப்பிடங்களிலிருந்து சிகாகோ சென்று, அங்கு விமானத்தைப் பிடிப்பது எளிதில் இயலாத ஒன்று.
மேலும், கரானோ தொற்று காரணமாக பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுவிட்டன. அதனால் மாணவர்களுக்கான விடுதி வசதிகள் இல்லாமல், அவர்களால் வெளியிலும் தங்க முடியாமல் நிதிவசதி இழந்து உணவுப் பிரச்னைகள் வரை சந்தித்து வருகின்றனர். இவர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்தும், அவர்களின் பெற்றோர், குடும்பத்தினரிடமிருந்தும் எனக்கு ஏராளமான வேண்டுகோள்கள் தினசரி வந்த வண்ணம் உள்ளன. நியூயார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள இந்திய மாணவர்களும் மென்பொருள் வல்லுநர்களும் தங்களின் பாதுகாப்பு குறித்தும், இந்தியா திரும்புவது குறித்தும் பெரும் கவலையுடன் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், நான் அங்கிருந்து தான் அவர்களின் பிரதிநிதியாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தற்போதைய துரதிஷ்டவசமான நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பிரச்னைகளை மனிதாபிமான முறையில் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னைக்கு இரண்டாம் கட்டமாக விமானம் இயக்கும்போது, அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களையும் அழைத்துவந்து, அந்த விமானத்தில் கொண்டு சேர்க்கவும் அல்லது மும்பை, டெல்லி வழியாக நியூயார்க், நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் இருந்து விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?