கரோனா தொற்று தமிழ்நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இந்தத் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நோய்த் தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தொற்று பரவுவதைத் தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த முழு ஊரடங்கு வெள்ளிக்கிழமை (19-06-2020) அன்று அமலுக்கு வந்த நிலையில், மக்கள் தேவையற்று வெளியே சுற்றுவதைக் கண்காணிக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த 12 நாள்களில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் அத்தியாவசியப் பொருள்களுக்காகக் கூட கடைகளைத் திறக்கக்கூடாது என்றும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்கள் வெளியே வராமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியும் அமைதியாகவும் காணப்பட்டது.